தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Wednesday, September 27, 2006

சாமிகள் எல்லோர்க்கும் ஒன்றடா..!

சாமிகள் எல்லோர்க்கும் ஒன்றடா..!
நடுவில் தூதுசென்றிட நீயும் யாரடா? - என்மொழி
தமிழினில் அர்ச்சனை கேட்கத் தயங்கிடும்
சாமியும் ஊரினில் ஏதடா?

சமத்துவம் பேசுதல் தந்திரமோ!-இங்கு
பேதங்கள் இலையென்றோர் மந்திரமோ!
சட்டையின்றி ஓர் சகதியில் வாடிடும் சக
மானிடர் காண்கையில் சங்கடமோ!

Sunday, August 13, 2006

காக்கை குருவியும்...

காக்கை குருவியும் காட்டுக் குயில்களும்
கண்டோமே அன்றுநம் சொந்தமென! - அற்ப
மானிடரேயிதை மறந்திட்டே இன்றுநீர்
அண்டை வீட்டார்களுடன் சண்டையென்ன?

முப்பதுகோடிகள் முகம்தனைக் கொண்டுமே
வாழ்ந்தாளே பாரதத்தாய் நிம்மதியாய்!
நூறு கோடிகளாய் முகம் ஆனபோதினிலவள்
அல்லல்கள், இன்னல்கள் காண்பதென்ன?

வேற்றுமையிலொரு ஒற்றுமையாம் என்றே
பாரினில் பாரதம் திகழக் கண்டோம்! - அந்த
ஒற்றுமைக்கும் இங்கே வேட்டு என இன்று
சண்டைகள் செய்தே நாம் வீழ்வதென்ன?

Thursday, August 10, 2006

சாதிகள் இருக்குதடி பாப்பா!

சாதிகள் இருக்குதடி பாப்பா! - அவற்றை
சான்றிதழில் மட்டும்கொள் பாப்பா!
சாத்திரங்கள் தேவையில்லை பாப்பா!- விஞ்ஞானச்
சூத்திரங்கள் படித்திடடி பாப்பா!

அஹிம்சையும் நல்லதொரு வழிதான்
அதற்குமோர் அளவுகொள் பாப்பா!
தீவினை கண்டு அச்சங்கள் வேண்டாம்
தீயென எரித்திடு பாப்பா!

ஏனிந்த பேதம்?

காசு படைத்தவன் நெருங்கிய சொந்தம்- தினம்
கஞ்சி குடிப்பவன் தூரத்துச் சொந்தம் - சாமி
எல்லார்க்கும் ஒன்றெனச் சொல்லிய வேதம்
வாழும் கோவிலிலே இந்தப் பேதம்!

Wednesday, August 09, 2006

மானுடப் பண்பு!

தீயெனச் சுடுகையில் தீண்டிட அச்சமும்- சுனை
நீரெனக் குளிர்கையில் நீந்திட இச்சையும்
கொண்டிடல் மானிடப் பண்பே! - சமமிங்கு
கண்டிட மறந்திடல் நன்றே!

வாழ்வோரைப் போற்றியும், வீழ்வோரைத் தூற்றியும்
பேசுதல் மானுடப் பண்பு! - ஐயா!
மாற்றிட இயலுமோ மானிடரே! எனக்
கேட்டிட வந்ததோர் வம்பு!

சட்டங்கள் செய்தென்ன கண்டோம்?

சட்டங்கள் செய்தென்ன கண்டோம்? - அதில்
சந்துகள், பொந்துகள் வசதியாய்க் கொண்டோம்!
செல்வம் படைத்தோர்க்கொரு நீதி - பாழும்
வறியவர்க்கு இங்கெங்கே மீதி?

அன்றொரு சுதந்திரம் கண்டோம்! -இன்றரசியல்
செய்வோர்க்கு அடிமையாச் சென்றோம்!
வாக்கு அளிப்பதோர் கடமை - இங்கே
ஐந்தாண்டு காலத்தில் அதுவுமோர் மடமை!

அன்பே கடவுளென்று உணர்த்த - பல
சான்றோர்கள் தோன்றினர் அன்று!
அவரே கடவுளெனக் கொண்டு- வீண்
சண்டைகள் கொண்டோமே இன்று!

தன்நலம் நீக்கியும் பொதுநலம் ஓங்கிட
வாழ்ந்திட்ட பெரியோர்கள் அன்று!
பிறநலம் தேயினும் வாழ்ந்திடுவோமென
சுயநலம் வாழுது இன்று!

தில் மாங்கே மோர்!

வெளிநாடுகளில் உடல் நலனிற்கு கேடு விளைவிக்கும் என்று புறந்தள்ளப்பட்ட குளிர்பானங்களான பெப்ஸி, கோலா போன்றவை இந்தியாவில் மட்டும் படு ஜோராக விற்பனை செய்யப்படுவதன் காரணம் என்ன?

அப்பூச்சிக் கொள்ளி மருந்துகளின் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு இந்தியனின் உடலில் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி எங்கிருந்து வந்தது? இந்தியனின் பரிணாம வளர்ச்சியா?

அரசின் மெத்தனப்போக்கை அறிந்ததனால்தான் அவர்களால் தயாரித்து விற்பனை செய்ய முடிகிறது. எப்போதேனும் ஒரு சமூக நல ஆர்வலர் அல்லது ஆய்வகம் இப்பானங்களை ஆய்வு செய்து ஓர் அறிக்கை விடுவதும், பத்திரிகைகளும் பரபரப்பாக செய்திகள் வெளியிடுவதும் வழக்கமான ஒன்றுதான்.

அரசும் ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யும். அத்துறையும் ஆய்வுகளை செவ்வனே(!?) செய்து கொண்டிருக்கும். இதர்கிடையில் அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் சேரவேண்டிய திருப்தியான அறிக்கை(!?) கிடைத்தவுடன் இவ்விஷயம் அப்படியே அமுங்கிப் போயிருக்கும்.

அத்திருப்தியான அறிக்கைகள் சமர்ப்பித்ததால்(!?) லாபத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை அக்குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களால் எப்படி ஈடு செய்ய முடியும்? அளவைக் குறைக்கவோ, விலையை அதிகரிக்கவோ போட்டிகள் மிகுந்த சந்தையில் இயலாது. தரத்தை வேண்டுமானால் குறைக்கலாம்.

இப்படியே தரம் நாளுக்கு நாள் பெருகி வரும். வழக்கம்போல் கோடைக் காலமும் வரும். கண்ணைக் கவரும் வண்ண விளம்பரங்களும், மக்களின் அபிமானத்திற்குரிய பிரபலங்கலும் அப்பானங்களை அருந்துவது போல் நடித்து விட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவர்.

அரசின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், பிரபலங்களின் மீதும் அநியாயத்திற்கு நம்பிக்கை வைத்திருக்கும் மிஸ்டர்.பொதுஜனம் வாங்கிப் பருகி விட்டு
"தில் மாங்கே மோர்" என்பார்.

வருகையின் நோக்கம்!

சமூகச் சீர்திருத்த சிந்தனைகள் எங்கிருந்தாலும் கற்று அறிதலும், எமக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்வதும்.